சமூக சிற்பிகள் -

வெறும் கல், சிலையாய் மாற சிற்பிகள் வேண்டும். மனிதனை மாற்ற உறவுகளா. உடைக்கவும், செதுக்கவுமாய் இதோ சில சிற்பிகள்.

மாலை நேரம். 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என ரேடியோ ரீங்காரம்.மனைவி மட்டும் அல்ல உறவு அமைவதும் அப்படித்தான். திடிரென நான் மரிய‌னை நினைத்தேன். அவன் வாய் விட்டு அழுதது இன்னும் நினைவில் உள்ளது. அவன் அழுவானா, என்னால் நம்ப முடியவில்லை.

சௌதி அரேபியா, ரியாத்தில் குப்பை கொட்டிய நேரமது. மரிய‌ன் தனது தங்கையின் திருமணத்தை (ஒரே தங்கை) எப்பாடு பட்டவது முடிக்க திட்டமிட்டிருந்தார். அது இரண்டு வருட ஒப்பந்தம் முடிந்து விடுமுறைக்குச் செல்லவிருந்த நேரம். நினைத்திருந்தால் போயிருக்கலாம். விடுமுறைக்கு செல்லவில்லை என எழுதிக்கொடுத்து விமான பயணச்சீட்டுக்கான பணம், விடுமுறைக்கான சம்பளம் மற்றும் 10 சதவிகிதம் சம்பளம் பிடித்தம் (அதாவது, மாதச்சம்பளத்தில் 10 சதவிகிதம் கம்பெனியில் பிடித்துக் கொள்வார்கள் ; இடையில் நம்மால் எதாவது பிரச்சனை என்றாலோ அல்லது கம்பெனியிலிருந்து நம்மை அனுப்ப வேண்டு மென்றாலோ செலவுக்கு இதிலிருந்து எடுத்துக்கொள்வார்கள் ;

இரண்டு வருட இறுதியில் விடுமுறைக்குச் செல்லும்போது கையில் கொடுத்துவிடுவது என்பது அப்போது நடைமுறையில் இருந்தது. இப்போது எப்படியோ தெரியாது!) என்று நிறையவே அனுப்பியிருந்தார்.

இதில் கொடுமையான விஷயம் என்னெவென்றால், நண்பரை திருமணத்திற்கு வரவேண்டாம் என அவருடைய பெற்றோரே கேட்டுக் கொண்டதுதான்! அவரும் போகவில்லை. சொன்ன காரணம் 'போக வர செலவு ஆகும், அந்த பணத்தயும் அனுப்பிவிடு திருமண செலவுக்கு ஆகும்'!

இது எப்படி இருக்கு?!

அதாவ‌து, த‌ன‌க்குத் தெரிந்த‌ தெரியாத நபர்களெல்லாம் திருமணத்திற்க்கு கட்டாயம் வரவேண்டும் என வருந்தி வறுத்தி அழைக்குமிட‌த்தில் இந்த‌ வைப‌வ‌த்திற்கு கார‌ண‌மான ந‌ப‌ரை அதுவும் ஒரே அண்ணான், அவரை நீ வ‌ர‌வேண்டாமென சொல்ல எப்படி மனம் வந்ததோ! இவரும் அதை பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை. திருமணம் நல்லபடியாக முடிந்தால்போதுமென்று இவரும் இருந்துவிட்டார்.

நண்பர் இனி அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்துதான் நாடு திரும்ப அல்லது விடுமுறைக்கு போக முடியும்! இவருடைய சொந்த விருப்பு வெறுப்பு எத‌ற்கும் இங்கு ம‌திப்பு இல்லை. திருமணம் நன்றாக முடிந்தது என்ற செய்தி கேட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தார். கூடவே 2 லட்சம் கடன் என்ற செய்தியைக் கேட்டு ஆடியும் போனார்!

அத்தோடு போக‌வில்லை! அடுத்த குண்டு வெறோரு ரூபத்தில் வந்தது. புதிய‌ வீடு ஒன்று க‌ட்ட‌வேண்டும் அத‌ற்கு ப‌ண‌ம் அனுப்புமாரும் அவ‌ருடைய‌ பெற்றோர் கேட்டுக்கோண்ட‌ன‌ர். கோபத்தில் நண்பர் சிறிது காலம் யாரோடும் பேசாமல் இருந்தார். சில மாதங்கள் சென்றபின், ந‌ண்ப‌ருக்கு பெண் பார்த்து விட்டதாகவும் திரும‌ண‌ம் செய்ய வேண்டுமென‌வும் அத‌ற்கு த‌குதியான‌ வீடு ஒன்று இருந்தால்தான் ந‌ன்றாக‌ இருக்கும் என்றுசொல்லி பணம் கேட்டனர். நண்பர் லேசாக இறங்கி வந்தார்;

அதுவரை சேர்த்து வைத்திருந்த 3 மாத சம்பளம் மற்றும் நண்பர்களிடம் கடன் கம்பெனியில் லோன் என்று ஒரு பெரிய தொகையாகவே பெற்றோருக்கு அனுப்பிக் கொடுத்தார்.

வளைகுடா நாடுகளில் இருக்கும் நண்பர்களிடம் ஒரு பலகீனமான ஒரு விஷயம் என்னவென்றால், வீட்டுக்கு பணம் அனுப்பாமல் இருக்கும் ஆளிடம் உனக்கு கல்யாணம் உடனே பணம் அனுப்பு என்று சொன்னவுடன் காரியம் நடக்கும், இரங்காத மனமும் இரங்கும் ! அதுதான் இங்கும் நடந்தது.

4 மாதங்கள் கழித்து அடுத்த கடிதம். ந‌ண்பருக்கென்று 2 ஏக்கரில் ஒரு குடும‌ப‌ச்சொத்து ஒன்று இருந்தது, அதைவிற்று வீடு க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் போவ‌தாக‌. வீடு ந‌ம‌க்குத்தானே என‌ இவ‌ரும் சும்மா இருந்துவிட்டார் அங்கேதான் வில்லங்கம் என்று தெரியாம‌ல்.


ஆக‌, ஒரு ந‌ல்ல‌நாளில் 4 ஆண்டுக‌ளுக்குப்பின் ந‌ண்ப‌ர‌து திரும‌ண‌த்திற்காக‌ 4 மாத‌ விடுப்பில் நிறைய‌ க‌ன‌வுக‌ளோடு நாடு திரும்பினார். விடுப்பில் சென்றாலும், திரும‌ண‌த்திற்குப்பின் ந‌ல்ல‌ வேலை கிடைத்தால் ஊரிலேயே த‌ங்கிவிடவேண்டுமென்ற‌ ஒரு திட்ட‌த்துட‌ன்தான் சென்றார். ஆனால் விதியின் போக்கு வேறுமாதிரிய‌ல்ல‌வா இருந்த‌‌து!


ந‌ண்ப‌ரின் திரும‌ண‌ம் ந‌ன்றாக‌ ந‌ட‌ந்தேறிய‌து. நண்பர் இனிவர மாட்டார் என நாங்க‌ளும் எண்ண, சிறிது காலம் எங்களுக்குள் தொட‌ர்பு நின்றுபோயிறுந்தது. ச‌ரியாக‌ச் சொன்னால் 43 நாட்க‌ளுக்குபின், மீண்டும் ரியாத் வந்துவிட்டார்!

சொன்ன‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளைக் கேட்டு வ‌ருத்த‌மாக‌த்தான் இருந்த‌து. திரும‌ணத்திற்குப்பின், ஏதாவ‌து தொழில் தொட‌ங்க‌லாமென‌ வீட்டுப்ப‌த்திர‌த்தை எடுத்துக்கொண்டு லோனுக்காக வ‌ங்கிக்கு போயிருக்கிறார் ; அங்குதான் வீட்டுப்ப்ப‌த்திர‌ம் த‌ன் த‌ங்கையின் க‌ண‌வ‌ர் பெய‌ரில் ப‌திவுசெய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌து தெரிய‌வ‌ந்துள்ளது.

மிக‌வும் நொந்து போய் பெற்றோரிட‌ம் கேட்டிருக்கிறார். அங்கு அவ‌ருடைய‌ பெற்றோரே ந‌ண்ப‌ரை வீட்டை விட்டு வெளியே போக‌ச் சொல்லிவிட்ட‌தாக‌வும் பாச‌முள்ள த‌ன் த‌ங்கை மௌனியாக‌ இருந்த‌தையும் த‌ன் ம‌னைவியை சென்னையில் ந‌ண்ப‌ரின் உற‌வின‌ர் வீட்டில் விட்டுவிட்டு வ‌ந்திருப்பதையும் சொல்லி மிக‌வும் வ‌ருத்த‌ப்ப‌ட்டார். இல்லை அழுதார்.

இந்த‌ உல‌கில் எவ‌ன் ஒருவ‌னுக்கு ந‌ல்ல‌ துணை அமைகிற‌தோ அவ‌னால் எதையும் சாதிக்க முடியும். ந‌ண்ப‌ரின் சொந்த‌ ஊரில் 3 வீடுக‌ள் ம‌ட்டுமே த‌ள்ளி இருந்த‌ ந‌ண்ப‌ரின் ம‌னைவி வீட்டாருக்குக்கூட‌ எதுவும் சொல்லலாம‌ல் க‌ண‌வ‌ன் பின்னாலேயே சென்னை வ‌ரை வ‌ந்துவிட்ட‌ அவ‌ர‌து ம‌னைவி பாராட்ட‌ வார்த்தைக‌ளே வ‌ரவில்லை.

சென்னைக்கு வேலை தேடி போகிறோம் என்று சொல்லி நண்பர் இங்கு வந்ததும் அவரது மனைவியை உறவினர் வீட்டில் தங்க வைத்திருப்பதும் பின்னாளில் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு வ‌ழிவ‌குக்கும் எனறு சொல்லி ந‌ண்ப‌ர‌து மாம‌னாரிட‌ம் பேச‌வைத்து, பிர‌ச்ச‌னைகளை ப‌ட்டும் ப‌டாம‌லும் சொல்லி த‌ன் ம‌க‌ளை அழைத்துச்செல்ல‌ வேண்டினார். தன்னிடம் எந்த விஷயமும் தெரிவிக்காமல் நண்பர் எடுத்த முடிவுக்காக‌ முத‌லில் கோப‌ப்ப‌ட்ட‌லும் பின்ன‌ர் த‌ன் ம‌க‌ளை சென்னையிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டார்.

ச‌ம்பாதிப்பது எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதை விட ந‌ம‌க்காக‌ எவ்வ‌ள‌வு சேமிக்கிறோம் என்ப‌தும் முக்கிய‌ம். ஏமாற்றுவ‌தைவிட‌ ஏமாறுவ‌துதான் பெரிய குற்றம். வலியும் அதிக‌ம்.

3 நாட்க‌ளுக்கு முன், ந‌ண்பர் சென்னையிலிருந்து தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டார். ந‌ல‌ம் விசாரித்தார். சென்னையில் மீன‌ம்ப‌க்க‌த்தில் ஒரு ம‌ருந்த‌‌க‌ம் ந‌ட‌த்தி வ‌ருகிறார். அன்பான மனைவி, 3 குழ‌ந்தைக‌ள், சொந்த‌ தொழில்.... நிம்ம‌தியான‌ வாழ்க்கை.

ந‌ண்ப‌ரின் வாழ்க்கை ஒரு பாட‌ம்........ என‌க்கு! உங்களுக்கு ??? (பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் )

............. தேன் துளிகள் மீண்டும் சிந்தும் / ச‌ந்திப்போம்.

முதல் துளி

வணக்கம்,
வலைஎழுத்து எனக்கு புதிது. கடந்த சில மாதங்களாக சில பல இணையதளங்களை மேய்ந்து அதனதன் சாரம்சங்களை அலசி ஆராய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொறு விடயங்களில் மேம்பட்டிருப்பது அல்லது பிரபல்யமாய் இருப்பதை தெரிந்துகொண்டேன்.


இந்த வலைதளங்களில் தமிழ் மொழிப்பயன்பாடு அதாவது வழக்குச்சொற்களுக்கு மாற்றாக சொற்பிரயோகம் மிகவும் தூக்கலாக‌ இருப்பதையும் கன்டேன். இது எனக்கு வருமா என்று தயங்கி தயங்கி பின்வாங்கியதை தெரிந்துகொண்டு சிறுகுழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போன்று நண்பர் 'படுக்காளி' என்னை கட்டாயப்படுத்தி எழுதித்தான் ஆகவேண்டும் என்று எல்லா உதவிகளையும் செய்துகொடுததார். அவருக்கு என் முதல் வணக்கம்.

ஜெயமோகன் மற்றும் மனுஷ்யபுத்தினுக்கு கிடைதத மறைந்த திரு. சுந்தர ராமசாமி போன்ற மோதிரக்கை எனக்கும் கிடைத்திருக்கிறது என்ற

நம்பிக்கையோடு எழுத்துக்கடலில் குதிக்கிறேன். முத்துச் சிப்பிகளோடு வருகிறேனா அல்லது வெறும் சிப்பிகளோடு கரையேறுவேனா என்பதை காலம்தான் சொல்லும். எழுதத்தூண்டிய நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல உரித்தாக்குகின்றேன்.

+2 படித்த காலகட்டம் ச‌ட்டென்று நினைவில் நிழலாடுகிறது.

'தேன்துளி' என்ற கைஎழுத்து பிரதி 3 மாதங்களுக்கு ஒரு முறை நான் தங்கி இருந்த பள்ளி விடுதியிலிருந்து வெளிவரும். அன்றைய நாட்களில் அச்சு பதிப்பில் புத்தகங்கள் குறைவு. கலை தாகம் தீர்க்க, கையால் எழுதியும், வரைந்தும் நாமே புத்தகம் தயாரிப்பது கையெழுத்துப் பிரதி.

மொத்தம் 3 பிரதிகள் மட்டுமே வரும். ஒவ்வொரு பிரதியும் 40 பக்கங்கள் ; கதை, கவிதை, கட்டுரைகளை உடன் பயிலும் மாணவர்களிடமிருந்து வாங்கிச் சேர்ப்பதற்குள போதும்போது மென்றாகிவிடும்.

கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னற்தான் எழுதவே உட்காருவோம். நாங்கள் 4 பேர், அதில் இருவர் தற்போது கத்தோலிக்க மதகுருக்களாகவும், மூன்றாமவர் கல்லூரி பேராசிரியராகவும் இருக்கின்றனர்) மட்டுமே விடியவிடிய
அமர்ந்து எழுதி எப்படியாவது 3 பிரதிகளை முடித்துவிடுவோம். மறுநாள் காலை அந்த பிரதிகளை விடுதி பொறுப்பாளரிடம் கொடுக்கும் போது அவர் தரும் பாராட்டுச்சொற்களில் எல்லா அசதிகளும் பட்ட துன்பகங்களும் ஓடியே போகும். அதுதான் எங்க‌ளுக்கு கிடைக்கும் விலைம‌திப்பில்லாத‌ ப‌ரிசும்கூட‌.

கையெழுத்துப் பிரதி இன்றைய தொழில் நுட்பத்தால் வலைப் பதிவு.
காலங்கள் மாறினாலும்,கலை இலக்கிய தாகம் மாறுவதில்லை.

எனது இந்த முயற்சிக்கு ஆதரவு வேண்டுகிறேன்.